Wednesday, November 16, 2011

அடிமாடா போலாமா?

என்ன என்ன மனுசன்னு நினைச்சீங்களா? இல்லை மாடுன்னு நினைச்சீங்களா?

மாடு மாதிரி கஷ்டப்பட்டு வேலை செய்யுறேன்…..

இதுமாதிரியான உதாரணங்களே போதும் மாடுகள் மனிதர்களை விட எவ்வளவு உடல் உழைப்பினை கொடுக்கின்றன என்பதற்கு, பிறந்ததில் இருந்து இறக்கும் வரை உள்ள ஒவ்வொரு கால கட்டங்களிலும் மனிதர்களுக்கு எதேனும் ஒரு வகையில் அது பாலாகவோ, மோராகவோ, தயிராகவோ, சாண எரிவாகவோ, விவசாய வேலைக்கோ, மாட்டு வண்டி ஓட்டுவதற்கோ, இல்லை உழுவதற்கோ என்று எத்தனையோ வேலைகளை பசுமாடுகளும் எருதுகளும்தான் செய்து வருகின்றன

இந்த ஜீவன்கள் மனிதர்களை நம்பி இருக்கின்றனவா இல்லை மனிதர்கள் இந்த ஜீவன்களை நம்பி இருக்கிறார்களா?

என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே உணர்ந்து கொள்ள முடியும், சாதாரணமாக எட்டு மணி நேரம் வேலை செய்யும் மனிதனுக்கு உணவு உண்ணும் நேரம், தேநீர் இடைவேளை நேரங்கள் அனைத்தும் போக சரியான அளவு ஊதியம் கொடுக்காவிட்டால் என்ன பிரச்சனை செய்வார்கள்?

ஆனால் நேரம் காலம் பார்க்காமல் ஆண்டு முழுவதும் தான் வாழும் காலம் முடிய வெறும் புல்லுக்கட்டும் புண்ணாக்கும் மட்டுமே உணவாக கொண்டு தன்னையே கொடுத்து உழைத்து கொண்டிருக்கும் மாடுகளை அதன் வயதான காலத்தில் கூட வைத்து பராமரிக்காமல் அடிமாடாக அனுப்புவதில் என்ன நியாயம் இருக்க போகிறது?

தலைவலி, காய்ச்சல், உடல்வலி, அந்த நோய், இந்த நோய் என்று எந்த பசுமாடோ இல்லை எருதுகளோ வேலை செய்யாமல் படுத்துக் கிடப்பதுண்டா? தன் வாழ்நாள் முழுக்க அதன் கன்று குடிக்க வேண்டிய பாலை கூட முழுதாக குடிக்க விடாமல் தடுத்து எடுத்து விற்பனை செய்து வருவாயை பெருக்கி கொள்ளும் மனிதன் அதன் கடைசி காலத்திலாவது அதனை நிம்மதியாக இறக்க விட வேண்டுமா இல்லையா?

அவ்வாறில்லாமல் ஒவ்வொரு கால கட்டத்திலும் அதனுடைய கழுத்தில் பிரைஸ் டேகினை (PRICE TAG) தொங்க விட்டு பார்ப்பது சரியாக இருக்குமா?

பெற்ற தாய் தந்தையாகட்டும், இல்லை பசுமாடுகளாகட்டும், எந்த உயிரினமாக இருந்தாலும் தான் வாழும் காலம் முடிந்து, உழைக்கும் காலம் முடிந்து கடைசி காலத்தில் அவர்களை நிம்மதியாக உயிர் பிரிய விடுவதே சரியானதாக இருக்கும், பராமரிக்க முடியாவிட்டால் அவைகள் விட்டால் போதும், எங்காவது போய் மேய்ந்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பார்க்கும் கருணை பார்வைக்கு ஒப்பானது ஒரு பசுமாட்டின் பார்வை, தாய் கூட சில சமயம் குழந்தையை கோபப்படுவாள், ஆனால் எந்த பசுமாடாவது கோபபார்வை பார்த்து கண்டதுண்டா?


கன்றுகுட்டியாய் பிறந்ததில் இருந்து வளரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களுக்கு பயனளித்து, உடல் தளர்ந்து, பலம் குன்றி, வயிறு ஒட்டிப்போய், எழும்பு தெரிய, கண்களில் வழியும் கண்ணீரோடு சாவதற்காக அடிமாடாக லாரியில் போகும் போது அவைகள் மனதில் என்ன நினைக்கும் என்று என்றாவது எண்ணி இருக்கிறோமா?

சிந்திக்க தெரிய இருக்க வேண்டிய ஆறாவது அறிவு இல்லாததால் அவை விலங்கினங்களாக உள்ளன, அவற்றுக்கும் சிந்திக்க தெரிந்து, என்ன தப்பு செய்தோம்? பிறந்ததில் இருந்து இவர்களுக்காக உழைத்ததை தவிர? கேவலம் காசுக்காகவா நம்மை கொல்வதற்காக அனுப்புகிறார்கள் என்று நினைத்தால் எந்த ஜென்மத்துக்கும் நம்முடைய சந்ததிகள் விருத்தியாகுமா?

காட்டில் வாழும் கொடிய விலங்குகளாக இல்லாமல், வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்கினங்களாக இருப்பதாலே ஆடு, மாடு, கோழி போன்றவை வீட்டு விலங்குகளாக சொல்லப்படுகின்றன, இந்த வீட்டு விலங்குகளை வளர்ப்பதற்கு ஜீவ காருண்யம் என்று வேறு சொல்கிறார்கள், இப்படி இந்த ஜீவன்களை கொல்ல சொல்லி எந்த காருண்யம் சொல்கிறது?

அதுவாவது பரவாயில்லை, சரியோ தப்போ இறைச்சி வெட்டுபவர்களும், கசாப்பு கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இது தங்களுடைய தொழில் என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது, ஆனால் ஒரு குடியானவன் வீட்டில் இருந்து அடிமாடாக அனுப்புவதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதுவே இதனை எழுதவும் காரணமாக அமைந்துவிட்டது.

கடைசியாக, பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதும், உழைத்து களைத்த பசுமாடுகளை பணத்துக்காக அடிமாடாக அனுப்புவதும் ஒன்றே, இனிமேல் வீட்டு விலங்குகள் என்று பசுமாடுகளை சொல்லாதீர்கள், உண்மையில் வீட்டு விலங்குகள் அவையல்ல..! ……………………………….???????

8 comments:

  1. இந்த உலகில் மனிதனை தவிர அனைத்து உயிரங்களுமே கொஞ்சமாவது நன்றி உணர்ச்சியுடன் இருக்கும். மனிதன் மட்டுமே அட்டை போல உறிஞ்சி விட்டு கவனிக்காமல் போய்க்கொண்டே இருப்பான்.

    ReplyDelete
  2. ஆடு கோழிகள் கூட தான் கறிக்கு எடுத்து செல்லப் படுகிறது... அதை வளர்க்கும் மனிதன் மாட்டை மட்டும் வித்தியாசமாய் பார்ப்பான் என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை... மொத்தமாக புலாலை உன்வதையே நிறுத்தினால் இதுவும் நின்று போகும்....

    ReplyDelete
  3. கேரளாக்கு அடிமாட்டு விலைக்கு அனுப்புவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இன்றுதான் அதன் விளக்கம் கிடைத்தது :-(

    ReplyDelete
  4. மாடு என்றால் செல்வம்னு ஒரு அர்த்தம் உண்டு நைட்டு...அதை வெளியே அனுப்பலாமா..

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை... இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதை அழகான சிறுகதையாக வடித்திருக்கலாம்...

    ReplyDelete
  6. மாப்ள கொன்னுட்டே போ!

    ReplyDelete
  7. மாப்ள கொன்னுட்டே போ!

    எதை? எப்போது? எங்கே?

    ReplyDelete
  8. நாய், மாடு..அடுத்து? நல்ல போஸ்ட் சுரேஷ். கால்நடை ஆராய்ச்சியில் 'உமக்குத்தானே குடுக்க வேணும் டாக்டர் பட்டம். டாக்டர் வாழ்க'.

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!