Thursday, April 12, 2012

தனுஷின் 3 படம் - ஒரு பார்வை



படம் வெளியாகி இரண்டு வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதாலும், இணையத்திலும், வெளியுகிலும் நண்பர்களின் கொலைவெறி விமர்சனத்தாலும் போகவே கூடாது என நினைத்து தவிர்த்திருந்த படம், வேறு வழியில்லாமல் போக வேண்டிய நிலையில் பார்க்க நேரிட்ட போதுதான் ஒரு நல்ல அனுபவத்தை இழக்க இருந்தோமோ என தோன்றியது

ஸ்ருதி மற்றும் தனுஷின் மாணவப்பருவம், வாலிப பருவம், திருமணத்திற்கு பின்பான காலகட்டம் என மூன்று காலகட்டங்களில் கதை நகர்கிறது.

ஒரு சுபயோக சுபதினமான மழைக்காலத்தில் ஸ்ருதியின் ரிப்பேரான சைக்கிளை சரி செய்திட உதவிடும் போது ஆரம்பிக்கிறது ஸ்ருதியின் மீதான காதல் தனுசிற்கு, ஸ்ருதி பள்ளிக்கு போகும் வழியிலும், டியூசன் செல்லும் வழியிலும், வீட்டிற்கு செல்லும் வழியிலும் பின்தொடர்ந்து வாட்ச்மேன் வேலை பார்த்து, கடைசியில் டியூசனிலும் சேர்ந்து காதலை வளர்க்க தொடங்குகிறார் தனுஷ்

ஆரம்பத்தில் உதவிக்கு வரும் போதே தவிர்க்க நினைக்கும் ஸ்ருதி, விடாப்பிடியான தனுஷின் சேசிங்கால் கொஞ்சம் மனம் மாறுகிறார், இரண்டு நாளாக காணாதவனை திடீரென்று பின்னால் கண்டு புன்னகை பூக்க தொடங்குகிறார், ஸ்ருதியின் புன்னகையையே மூலதனமாக கொண்டு, ஸ்ருதியின் அப்பாவிடம் அடிவாங்கினாலும் அவரின் வீட்டு வாசலிலேயே நின்று காதலை சொல்லி சம்மதம் வாங்குகிறார் தனுஷ்

நான்கு நாள் பின்னால் வருபவன் ஒருநாள் காணவில்லையென்றால் தற்செயலாக திரும்பி பார்ப்பது பெண்களின் இயல்பே, அதற்கே லவ் ஒர்க் அவுட் ஆகிவிடும் என்பது சினிமாவில் மட்டுமே நடக்கும் அதிசயம், உண்மையிலேயே அப்படி நடக்கும் வாய்ப்பிருந்தால் நான் பின்னால் சுற்றிய பதினைந்து பிகர்களில் பத்தாவது செட்டாகி இருக்கும், ஹூம்ம்ம்..

ஸ்கூலில் படிக்கும் போதே காதலை படிக்க ஆரம்பிக்கும் இருவரும், வீட்டின் மொட்டை மாடியிலும், ஆளில்லாதபொழுது தனிமையில் வீட்டிலும் சந்தித்து காதலை வளர்க்கிறார்கள், சும்மா சொல்லக்கூடாது ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்ருதி அப்பா எட்டடி பாய்ந்தால் மகள் முப்பத்தி இரண்டடி பாய்கிறார், கமல் திரையில் தன்னையே பார்ப்பது போல உணர்ந்தேன் என சொன்னதில் தவறே இல்லை, தனுசும் மனைவியாவது மண்ணாங்கட்டியாவது என புகுந்து விளையாடி இருக்கிறார், இருவருக்கும் இடையேயான நெருக்கமான காட்சிகளில், பிசிக்ஸ், கெமிஸ்டிரி, பாட்டனி, ஜீவாலஜி, பொறியியல், மருத்துவம் என இருக்கும் அனைத்து சப்ஜெக்ட்டுகளும் செண்டம் அடிக்கின்றன

தாடி, மீசை இல்லையென்றால் ஸ்கூல் மாணவன், கொஞ்சம் தாடி, மீசை வைத்தால் இளைஞன், தாடியை எடுத்துவிட்டு கோட் சூட் போட்டால் பெரிய மனிதன் என தனுஷின் பாத்திர படைப்பு அவர் போடும் கோட்டை போலவே கனகச்சிதமாக பொருந்துகிறது

ஸ்ருதியின் அப்பா நோஞ்சானாக இருப்பதால், இவர்களின் காதலுக்கு வில்லன் விசா வடிவில் வருகிறது, விசா வந்ததில் இருந்துதான் தனுஷிற்கு பைபோலார் டிஸ் ஆர்டரும் வருகிறது, விசா எடுத்தால் வெளிநாடு போக வேண்டும், அதே போல விசா வந்ததால் தனுஷும் மேலோகம் போக போகிறார் என சொல்லாமல் சொல்லியது டைரக்டர் டச்

விசாவால் காதலில் வில்லங்கம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்த ஸ்ருதி தனது பாஸ்போர்ட்டை எரித்து விடுகிறார், அதனை கண்ட அவரது அம்மா ரோகிணி மகளை அறைந்து விடுகிறார், அதனால் டென்சனான ஸ்ருதி தனுஷிடம் உடனே திருமணம் செய்ய வேண்டும் என அவசரப்படுத்துகிறார், அப்பா பேச்சை தட்டாத நல்ல பிள்ளையான தனுஷ்(?!) என் அப்பாவிடம் கேட்டுவிட்டு பிறகு திருமணம் செய்யலாம் என கூறுகிறார்.

தனிஷின் அப்பா பிரபுவும் இருவரும் எங்கேயோ போய் திருமணம் செய்து கொள்ளுங்கள், நான் பிளாட் வாங்கி தருகிறேன் என கூறிவிட, இருவரும் திருமணம் செய்ய தேர்ந்தெடுக்கும் இடம் பணக்காரர்கள் குடிக்கும் பஃப்,  அடுத்தவனின் ஐந்தாவது மனைவியை தள்ளிக்கொண்டு போய் திருமணம் செய்ய நினைப்பவன் கூட ஒரு கோயிலிலோ, ரிஜிஸ்டர் ஆபிசிலோ, அட்லீஸ்ட் வீட்டில் உள்ள சாமிபடத்தின் முன்போதான் தாலிகட்ட நினைப்பான்

ஆனால் இங்கு பாரில் தாலிகட்டி திருமணம் செய்வதாக காட்டப்படும் போது இருவருக்கும் இடையேயான அதுவரையான காதலே கேலிக்கூத்தாக்கப்படுகிறது, இவ்வகையில் டைரக்டர் ஐஸ்வர்யா, கலாச்சார காவலர்கள் மீது மட்டுமல்லாமல், திருமண மண்டப அதிபர்கள், புரோகிதர்கள், கோயில் பூசாரிகள், திருமண பொருட்கள் விற்பவர்கள், பூ கட்டுபவர்கள், சமையல்காரர்கள், நகைக்கடைக்காரர்கள், திருமணம் சம்பந்தமான இன்னபிற அனைவர்கள் மீதும் அம்பு தொடுத்திருக்கிறார், பின்னே இதனையே முன்னுதாரனமாக கொண்டு நம்மவர்கள் ஆரம்பித்துவிட்டால் மேற்சொன்னவர்களின் பாடு என்னாவது? ஏற்கனவே அலைபாயுதே எபக்ட் அலைபாய்ந்து கொண்டிருப்பது போதாதா?

இதுவரையேயான மூன்று படம் என்னுடைய விமர்சனம் போல் அல்லாமல் நன்றாகத்தான் சொல்கிறது, ஆனால் இதற்கு பிறகு வருவதுதான் தனுஷின் பைபோலார் டிஸ்ஆர்டர் எனும் மனவியாதி, அதில் ஆரம்பிக்கிறது ஸ்ருதியின் அழுகையும், படம் பார்ப்பவர்களின் மண்டைகாய்ச்சலும், அதிலும் ஸ்ருதி குளோசப்பில் அழுகையில் பதினேழாம் அறிவு பளீரென்று எரிகிறது.

இந்த பைபோலார் டிஸ்ஸார்டர் தனுஷை போலவே படம் பார்ப்பவர்களையும் குழப்ப, அவரை போலவே என்னவென்று புரியாமல் மக்களும் குழம்ப, இறுதியில் படம் பார்ப்பவர்களுக்கும் பைபோலார் டிஸ்ஸார்டர் வந்துவிடும் அபாயகட்டம் நெருங்கும் போது, நம்மை முந்திக்கொண்டு கழுத்தறுத்து சாகிறார் தனுஷ், அத்துடம் படம் முடிவடைகிறது.

படத்தில் மூன்றில் இரண்டு பாகம் ஓகேவாக இருப்பதால் இடைவேளைக்கு பிறகான காட்சிகள் சோதனை ஏற்படுத்தினாலும் மெஜாரிட்டி அடிப்படையில் இப்படம் தப்பி பிழைக்கிறது, கொலைவெறியின் பாடலின் மேல் எனக்கு பெரிதாக அபிப்ராயம் இல்லாமல் இருந்தததால் அதன் படமாக்கல் குறித்தும் ஒன்றும் தோன்றவில்லை, ஆனால் கண்ணழகா பாடலும், நீ போ பாடலும், அதனை படமாக்கிய விதமும் அருமையாக இருந்தது.

பிண்ணனி இசையும், ஒன்றிரண்டு பிஜிஎம்களும் ரொம்பவே ரசிக்க வைத்தன, கண்ணாடி போட்ட சிவப்பு தனுஷ் என்று யாரும் காதல் கொண்டேன் இரண்டாம் பாகம் எடுக்க நினைத்து ஹீரோவாக போடாமல் விட்டால், ஜிவி, பிரகாஷிற்கு அடுத்து நல்லதொரு இடம் அனிருத்திற்கு கண்டிப்பாக இருக்கிறது, வருங்காலத்தில் நல்லதொரு இசையமைப்பாளராக வருவார் என நம்புகிறேன், ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தில் தவறவிட்ட இடங்களையும் சரிசெய்து நல்லதொரு டைரக்டராக மிளிர்வார் என நம்புகிறேன்.

மொத்தத்தில் இப்படம் எனக்கு பிடித்திருந்தது, ஏற்கனவே பாதி சைக்கோ, பாதி மெண்டலாகி திரிவதால் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு இந்த கொலைவெறி மூன்றும் பிடித்திருந்தது, நாளைக்கே ”கீழ்ப்பாக்கம்: “ நீ பைத்தியம்” என யாராவது படம் எடுத்தால் அதுவும் எனக்கு பிடிக்கும் என்றே தோன்றுகிறது.
  

7 comments:

  1. ப்ளாக் டிசைன் எல்லாம் பலமா இருக்கு..அடுத்த ரவுண்ட் ஆரம்பமா?

    ReplyDelete
  2. // மொத்தத்தில் இப்படம் எனக்கு பிடித்திருந்தது, ஏற்கனவே பாதி சைக்கோ, பாதி மெண்டலாகி திரிவதால் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு இந்த கொலைவெறி மூன்றும் பிடித்திருந்தது, நாளைக்கே ”கீழ்ப்பாக்கம்: “ நீ பைத்தியம்” என யாராவது படம் எடுத்தால் அதுவும் எனக்கு பிடிக்கும் என்றே தோன்றுகிறது. //

    என் இனமடா நீ...!

    ReplyDelete
  3. காலை வணக்கம்!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. http://asokarajanandaraj.blogspot.in/2012/04/3.html

    ReplyDelete
  5. வித்தியாசமான பார்வை உங்கள் பார்வை

    ReplyDelete
  6. புது பார்வை...

    ReplyDelete

உங்களுடைய எண்ணங்களை பகிருங்கள் ..!