நண்பர்களோ, உறவினர்களோ சிறு வயதில் அறிமுகமாகும் போதும், கிடைக்கும் போதும் ரொம்பவே மனதிற்கு நெருக்கமாகி போகிறார்கள், கூடி விளையாட, பகிர்ந்து உண்ண, சண்டை போட, போட்ட சண்டையை மறந்து விட்டு மீண்டும் பேசி மகிழ என்று சிறு வயது நட்புகளும், உறவுகளும்தான் எவ்வளவு நெருக்கமான உறவுகளாக ஒவ்வொருவருக்கும் அமைகிறது.
குழந்தை பருவத்தில் இருந்து வளர வளர கிடைக்கும் நட்புகளும், உறவுகளும் மாறிக் கொண்டே வருகின்றன, ஆனால் குழந்தை பருவத்து சண்டை மட்டும் மாறாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது, முன்னர் பல்லால் கடித்தவர்கள், இப்பொழுது கையால் அடித்துக் கொள்கிறார்கள், ஆனால் குழந்தைகளின் சண்டை குழந்தைதனமானது என்பது தெரியாமல் இப்பொழுது எத்தனை பெற்றோர்கள் சண்டை போடுகிறார்கள்?
சமீபத்தில் எங்கள் காம்பவுண்டில் இருந்த ஒரு குடும்பம் காலி பண்ணிக் கொண்டு போனார்கள், அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அவர்களது குழந்தை அடுத்த குழந்தையோடு சண்டை போடும் போது மற்றவர்கள் தடுக்கிறார்கள் என்பதுதான் காரணமாம்.
எப்பொழுதுமே அந்த அம்மா ஒரு உக்கிர பார்வையோடுதான் திரிந்து கொண்டு இருப்பார், அவர்களது வீடும் 13ம் நம்பர் வீடு போலவே தெரியும், குழந்தைகளின் சண்டையில் அந்தம்மாவின் பையன் அடிவாங்கி வந்துவிட்டால் போச்சு, பையனை வெள்ளாவி வைக்காமலே வெளுத்து விடுவார், இப்படித்தான் இருக்கிறது சில மனிதர்களின் மனம், நெருக்கமான உறவுகளோ, நண்பர்களோ இல்லாமல் ஊர் விட்டு ஊர் வந்து வாழும் பல குடும்பங்களில் இந்த நிலைதான் நீடிக்கிறது.
தன்னுடைய கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள இயலாமல் அனைத்தையுமே மனதில் எத்தனை காலம்தான் பூட்டி வைத்து கொண்டு ஒருவர் வாழ முடியும், நீருக்குள் அமிழ்த்தி வைக்கும் பந்தினை போல வெளியே வந்துவிடாதா?
குழந்தை பருவம், மாணவ பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் காலங்கள் என ஒவ்வொரு கால கட்டங்களிலும், நட்புகளும், உறவுகளும் மாறி மாறி வந்து போய் கொண்டு இருக்கிறார்கள், அவற்றில் சிலர் மனதிற்கு நெருக்கமானவர்களாகவும் அமைகிறார்கள், ஆனால் அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாதவாறு, படிப்பு, வேலை, குடும்பம், குட்டிகள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்களால் பிரிவுகளாக அமைந்து விடுகின்றன.
கடைசியாக நிகழ்காலத்தில் இருக்கும் நட்புகளோ, உறவுகளோதான் மனதிற்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்களுடன்தான் நம்முடைய சுக, துக்கங்கள், சந்தோசங்கள், ஏமாற்றங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது, எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளவும், அப்படியே வாழ்ந்து பழகவும் வேண்டியுள்ளது.
வாழும் காலத்தில் எதனையுமே சேர்த்து வைக்க முடியாமல், கஷ்ட ஜீவனம் நடத்தும் மனிதர்களுக்கு, மனதிற்கு நெருக்கமான ஒரு நட்பினையோ, உறவினையோ கூட சம்பாதிக்க முடியாமல், அல்லது அப்படி அமையாமல் போவது எவ்வளவு பெரிய துரதிஷ்டம்?
சமீபத்தில் நண்பர் ஒருவரின் மச்சானின் அப்பா இறந்து விட்டார், கொஞ்சம் தொலைவில் உள்ள நகரம் அது, வண்டி பிடித்து சென்ற நண்பர்கள், இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம், சரக்கு எதுவும் இல்லையா என மனசாட்சி இல்லாமல் கேட்டு வாங்கி குடித்தபின் தான் வந்தார்கள், தந்தை இறந்த துக்கத்தை மற(றைத்)ந்து விட்டு சரக்குபசாரம் செய்து அனுப்பினார் அவர், துக்க வீட்டிலேயே இப்படியென்றால் கல்யாண வீட்டில் கேட்கவா வேண்டும்?
கல்யாணமா? காது? குத்தா? சீரா? – நான் உம்புள்ளைக்கு இவ்வளவு செஞ்சிருக்கேன், நீயும் இவ்வளவு செய்யு, அந்தக்கா வூட்டுக்கு நான் அய்நூறு ரூபா மொய் வச்சேன், அவ என்னடான்னா எனக்கு அம்பதுதான் வச்சிருக்கா? விடு வெச்சுக்கிறேன், இனிமே அவ வீட்டு படிகூட மிதிக்க மாட்டேன்
இங்கு எல்லாமே தன்னலமாக போய் விட்டது, ஒரு நல்லதுக்கும், கெட்டதுக்கும் கூட நமக்கு என்ன லாபம் என சிந்தித்து பார்த்து பங்கெடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள கூடிய நிலைமையில்தான் உள்ளோம்
ஒவ்வொருவரும், ஒவ்வொரு கால கட்டங்களிலும் நட்புகளையும், உறவுகளையும் பற்றிய சுய ஆய்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் மட்டுமே இன்று வரை மாறாமல் உள்ளது.
காலம் எனும் வகுப்பு ஆசிரியர், அனுபவம் எனும் பாடத்தினை எல்லோருக்கும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறான், அப்பாடத்தில் எளிதாக பாசாகிவிடுகிறவர்கள் ஈசியாக வாழ்வை புரிந்து கொண்டு முன்னேறிவிடுகிறார்கள், கொஞ்சம் சிரமப்பட்டு பாசாகிறவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் சிரமபடுகிறார்கள்.
ஆனால் தொடர்ந்து யாராலும் பாசாகமல் பெயிலாக முடியாது, அப்படி பெயிலானால் மொத்தத்திற்கும் பெயிலாக வேண்டியதுதான்.
சரி அத விடுங்க, இப்ப நீங்க சொல்லுங்க, நீங்க பாசா? பெயிலா?