இரண்டு வாரங்களாக பிளாக்கிற்கு வரமுடியவில்லை, உடல் நல பிரச்சனை, என்ன ஏதென்று தெரியாமல் ஒரு டாக்டரை பார்த்து எதேச்சையாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செஞ்சு பார்த்தா சிறுநீரககல் பிரச்சனைன்னு தெரிய வந்தது, ஏற்கனெவே இருந்த பல பிரச்சனைகளுக்கு நடுவில் புதுசா இன்னொன்னு, அந்த டாக்டரே திருப்பூரில் ஒரு பிரபல(?) டாக்டரை சிபாரிசு செஞ்சாரு, மறக்காம நாளைக்கு டாக்டரை போய் பாருங்க, நான் ஒரு லெட்டர் தரேன், டாக்டரை பார்த்துட்டு அடுத்த நாள் என்கிட்ட வந்து சொல்லனும்னு சொன்னாரு, நானும் சரின்னு லெட்டர வாங்கிட்டு கிளம்பி வந்துட்டேன், அடுத்த நாள் திருப்பூருல பந்து நடந்தது, எங்க கம்பெனியும் லீவு விட்டுட்டாங்க, சரி காலையிலேயே போய் டாக்டர பார்த்துரலாம்னு கிளம்பினேன், அந்த ஹாஸ்பிட்டல் போய் சேர்ந்தேன், நல்ல பெரிய ஹாஸ்பிட்டல், ரொம்ப விஸ்தாரமா கட்டி இருந்தாங்க, இதுக்கு முன்னாடி அந்த ஹாஸ்பிட்டல நான் அங்க பார்த்ததே இல்லை, சரி புதுசு போல இருக்குன்னு மனசுல நினைச்சுகிட்டு உள்ளே போனேன்,
நிறைய பெட்டுக இருந்தது, ரெண்டு மூணு கேபினு, ஸ்கேன் பண்ர மிசினு எல்லாம் இருந்தது, ஆனா காலியா இருந்தது, யாரையுமே காணோம், எல்லாரும் எங்க போயிட்டாங்கன்னு யோசிச்சுட்டு இருந்த போதோ எங்கயோ இருந்து ஒரு வயசான லேடி வந்தாங்க, அவங்ககிட்ட நான் டாக்டர பார்க்கனும்னு சொன்னேன், அதுக்கு அவங்க நீங்களா வந்தீங்களா இல்லை வேற டாக்டரு யாராச்சும் ரெபர் பண்ணினாங்களான்னு கேட்டாங்க, இல்லைங்க இந்த டாக்டருதான் ரெபர் பண்ணாருன்னு லெட்டர காமிச்சேன்,
சரிங்க டாக்டரு மத்தியானம் ரெண்டு மணிக்கு மேலதான் வருவாரு, நீங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு போயிருங்க, கரக்டா ரெண்டு மணிக்கு வந்திருங்கன்னு சொன்னாங்க, அடேங்கப்பா யாருமே இல்லைன்னு நினைச்சோம், அப்பாயிண்ட்மெண்ட்டெல்லாம் வாங்கனும்னு சொல்றாங்க ஒரு வேளை மதியம் பயங்கர கூட்டமா இருக்கும்போலன்னு நினைச்சுகிட்டேன், சரி எனக்கு ஒரு அப்பாயிண்ட்மென்ட் கொடுங்கன்னு கேட்டேன், அதுக்கு அவங்களும் சரி நான் உங்க பேர நோட் பண்ணிக்கிறேன், நீங்க வந்ததும் டாக்டர நேரா போய் பார்த்துகலாம்னு சொன்னாங்க, சரின்னு நானும் கிளம்பி வந்துட்டேன்,
மதியம் ரெண்டு மணிக்கு கூட்டம் வந்திருச்சுன்னா என்ன பண்றது அதனால முன்னாடியே போயிரலாம்னு நினைச்சு ஒன்னரை மணிக்கே போய் சேர்ந்துட்டேன், அப்பவும் போய் பார்த்தா வழக்கம் போலவே யாரையும் காணோம், அலோ யாராவது இருக்கீங்களான்னு சத்தம் போடலாம்னு நினைச்சப்ப திடீர்னு ஒரு கதவு தொறந்து புதுசா ஒரு பொம்பளை வந்தாங்க, யாரு நீங்க என்ன வேணும்னு கேட்டாங்க, நான் வந்துன்னு ஆரம்பிச்சு நடந்தத சொல்லி முடிச்சேன், சரி வெயிட் பண்ணுங்க டாக்டர் உள்ள பிசியா இருக்காரு, கூப்பிடுறேன்னு சொன்னாங்க, சரின்னு நானும் வெயிட் பண்ணினேன், ஒரு பத்து நிமிசம் ஆச்சு, வாங்க டாக்டர் கூப்பிடுராருன்னு சொன்னாங்க,
உள்ளே போனேன், டாக்டர் உட்காந்து டிவி பார்த்துட்டு இருந்தாரு, உட்கார சொன்னாரு, காலையில பார்த்த பொம்பளையும், இப்ப பார்த்த பொம்பளையும் எனக்கு ரெண்டு பக்கத்துலயும் பாடிகார்ட் மாதிரி நின்னுகிட்டு இருந்தாங்க, டாக்டர் ஒரு அஞ்சு நிமிசம் டிவி பார்த்தாரு, அப்புறம் திரும்பி என்ன பிரச்சனைன்னு கேட்டாரு, நானும் முதல்ல இருந்து கடைசி வரைக்கும் எல்லாத்தையும் ஒப்பிச்சேன், பழைய டாக்டரு எழுதி கொடுத்த ரிப்போர்ட்டையும் கொடுத்தேன், அத வாங்கி பார்த்த டாக்டரு ஒன்னும் சொல்லாம மறுபடியும் திரும்பி டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டாரு, இது என்னடா கொடுமைன்னு நினைச்சாலும் ஒன்னும் சொல்லாம நானும் அமைதியா உட்கார்ந்துகிட்டு இருந்தேன், மறுபடியும் ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சி திரும்பினாரு,
ஒரு வெள்ளை பேப்பரு எடுத்து ரெண்டு அவரைக்காய் படம் வரைஞ்சு குழாய் எல்லாம் போட்டு இதுக்கு பேருதான் சிறுநீரகம்ன்னு சொன்னாரு, நானும் சரிங்க டாக்டர்ன்னேன், இந்த குழாய்ல ஒரு கல்லு வந்து அடச்சுகிட்டு இருக்கு, அதனால யூரின் எல்லாம் சிறுநிர்பைக்கு போக முடியாம தேங்கி நிக்குது, அதனால இந்த ஒரு சைட்ல கிட்னி பெரிசாகிரிச்சு, அதனாலதான் உங்களுக்கு வலிக்குது அப்படின்னு சொன்னாரு, சொல்லிட்டு மறுபடியும் டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டாரு,
மறுபடியும் ஒரு அஞ்சு நிமிசம், திரும்பி எங்க விட்டேன்னு கேட்டாரு, கிட்னி பெரிசானதுல விட்டீங்க டாக்டர்னேன், ஆங் கரக்ட், இப்ப என்ன பண்ணனும்னாஅந்த கல்லு வெளிய வரவைக்கனும் கல்லு சின்ன கல்லுதான் ஒன்னும் பிரச்சனையில்ல, மாத்திரையிலேயே சரி பன்ணிரலாம்னாரு, நானும் நன்றி டாக்டர் மாத்திரை எழுதி கொடுங்கன்னு கேட்டேன், இருப்பா அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி, அந்த மாத்திரை பதினஞ்சு நாளைக்கு எழுதி தரேன், அது என்ன பண்ணும்னா சிறுநீர்குழாய பெரிசு பண்ணும் அப்ப அந்த கல்லு கீழ வந்திரும், ஆனா பயங்கரமா வலிக்கும், நீ பெயின தாங்கிதான் ஆகனும்னு சொன்னாரு,
ஆகா இதுவேறயா மனசில நினைச்சுகிட்டே டாக்டர பார்த்தேன், அவரு டிவிய பார்க்க ஆரம்பிச்சிட்டாரு, சரி இனி அஞ்சு நிமிசம் கழிச்சுதான அவரு திரும்புவாரு ஏற்கனெவே வாழ்க்கையில பலபிரச்சனை இனி இத வேற எப்படி சமாளிக்க போரேன்னு தெரியலயே, கைல காசு வேற இல்லன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போதே டாக்டரு திரும்புனாரு, நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது, ஒன்னும் கவலைபடாதீங்க, எண்டோஸ்கோப்பிக் அப்படினு ஒரு டிரீட்மெண்ட் இருக்குது, யூரின் டியூப் வழியா அத விட்டு ஈசியா கல்லை எடுத்திரலாம், வலியே இருக்காது, ரெண்டு நாள்ல சரியாகிரும், ஒரு பதினைஞ்சாயிரம் செலவாகும் என்ன சொல்றீங்க அப்படின்னாரு,
ஆகா ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்க, இல்ல டாக்டர் கையில பணம் இல்லை கொஞ்சம் டைட்டு, எனக்கு மாத்திரையே கொடுங்க நான் வலி தாங்கிக்கிறேன்னு சொன்னேன், அவரும் சரி நோ பிராப்ளம், 15 நாளுக்கு மாத்திரை தரேன், சாப்பிடுங்க சரியாகலன்ன எண்டோஸ்கோப்பிக் பண்ணிக்கலாம், நீங்க வெளில வெயிட் பண்னுங்க சிஸ்டர் மாத்திரை கொண்டு வந்து தருவாங்க, என்னோட பீஸ் 200 ரூபான்னாரு, அடப்பாவி நீ டிவி பார்த்ததுக்கு நான் 200 ரூபா தரணுமாடான்னு மனசுல நினச்சுகிட்டாலும் என்ன பண்ரது நானும் சரி டாக்டர்ன்னு வெளில வந்திட்டேன்,
ஒரு கால்மணி நேரம் கழிச்சு அந்த சிஸ்டர் வந்தாங்க, மாத்திரையை கொடுத்தாங்க, டாக்டர் பீஸ் 200 ரூபா, மாத்திரை 100 ரூபா, ரிஜிஸ்ரேசன் பீஸ் 50 ரூபா மொத்தம் 350 கொடுங்கன்னு கேட்டாங்க, எல்லாம் என் நேர கொடுமைன்னு பணம் கொடுத்தேன், அப்புறம் பில் போடும் போது அந்த பொம்பளை கேட்டுச்சு மெடிசின்னு பில்லுல எழுதனும், MEDECINE எழுதணுமா இல்லை MEDICENE எழுதணுமான்னு கேட்டுச்சு, எனக்கு வந்த ஆத்திரத்துக்கு செவுனியோட நாலு அப்பு அப்பனும்னு தோணுச்சு, இருந்தாலும் கோபத்த அடக்கிட்டு சாரிங்க எனக்கு எழுத படிக்க தெரியாதுங்கன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டேன்,
வீட்டுக்கு வர வழியில எல்லாம் யோசிச்சிட்டே வந்தேன், இந்த மாத்திரைய சாப்பிடலாமா வேணாமா, குழாய் வேற பெரிசாகிரும்னு சொன்னாரே, அப்புறம் சிருசாகுறதுக்கு மறுபடியும் மாத்திரை கொடுப்பாங்களோ என்னவோ, இல்லை எண்டாஸ்கோபிக் பண்றதா ஒன்னுமே புரியலை, மண்டைய பிச்சிகிட்டு வந்தது, சரின்னு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன், ஒரு போன் வந்தது,
நம்ம தேவியர் இல்லை ஜோதிஜி சார் போன் பன்ணினாரு, அவரோட கட்டுரை புதிய தலைமுறைல வந்திருக்கு அவரு வெளில இருக்குறதால புக்கு வாங்க முடியல, வாங்கிட்டு கூப்பிடுனாரு, இல்ல சார், எனக்கு உடம்பு சரியில்ல, இந்த இந்தமாதிரி ஆகிப்போச்சு, இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்னேன், அப்படியா உடம்ப பார்த்துக்கப்பா, ஆமா எந்த ஆஸ்பத்திரி போன டாக்டர் எப்படின்னு கேட்டாரு, தெரியல சார், புதுசா ஒரு ஆஸ்பத்திரி பிஎன் ரோட்டுல தொறந்திருக்காங்க, நாந்தான் பர்ஸ்ட் பேசண்ட் போல இருக்கு, நான் உயிரோட இருந்தா கண்டிப்பா அது நல்ல ஆஸ்பத்திரிதான்னு சொன்னேன்.
அவரும் ஹா ஹா ஹான்னு சிரிச்சுகிட்டே உடம்ப பார்த்துக்கப்பான்னு போன வச்சிட்டாரு...
டிஸ்கி : இது நான் ரெண்டு வாரம் பிளாக்குக்கு வராம இருந்ததுக்கான சுயபுராணம், தெரியாம படிக்க வந்திருந்தீங்கன்னா மன்னிச்சு விட்டுருங்க, இன்னொரு பாகமும் இருக்குது ...